வியாழன், 5 பிப்ரவரி, 2015

                                              பகவான் பாடிய பகவத் கீதை!




பகவத் கீதா என்பதற்கு பகவான் பாடியது என்று பொருள். கீதம் என்றால் பாட்டு. கீதம் என்று சொல்லாமல் கீதா என்று சொன்னதன் காரணம் என்ன? கீதை உபநிஷத்துகளின் சாரம். உபநிஷத் என்பது பெண்பாலாக உள்ள வட சொல். ஆகவே, கீதா என்பதும் பெண் பாலில் இருப்பது; உபநிஷத்துகளின் மாற்று உருவமே கீதை என்பதைக் காட்டுகிறது. பாண்டவர்களை துரியோதனன் நாடு கடத்திவிட்டான். அவர்கள் வனவாசமும் அஞ்ஞாத வாசமும் செய்து திரும்பினார்கள். பிறகு, தம் ராஜ்ஜியத்தைத் தம்மிடம் ஒப்படைக்கும்படி கிருஷ்ண பகவானைத் துரியோதனனிடம் தூது அனுப்பினார்கள். ஆனால், பேராசை கொண்ட துரியோதனன், பாண்டவர்களுக்கு ஊசிமுனை இடம் கூட தரமாட்டேன் என்றான். இனி, யுத்தம் செய்தே நாட்டைக் கைப்பற்ற வேண்டும் என்று பாண்டவர்கள் முடிவு செய்தார்கள். துரியோதனனும் அர்ஜுனனும் கண்ணபிரானின் உதவியைப் பெறுவதற்காக துவாரகைக்குச் சென்றனர். பகவான், நான் ஆயுதம் எடுப்பதில்லை. நிராயுதபாணியான நான் வேண்டுமா? அல்லது என் சேனை அனைத்தும் வேண்டுமா? என்று கேட்டார். துரியோதனன், அவருடைய சேனையே தனக்கு வேண்டும் என்றான். அர்ஜுனன், கண்ணபிரானின் உதவிதான் தேவை என்றான்.
யுத்தம் தொடங்க, இரு திறத்தாரின் சேனைகளும் அணிவகுத்து நின்றனர். கிருஷ்ணரின் ரதத்தில் அர்ஜுனன் அமர்ந்து, இரு பக்கத்து சேனையில் இருப்பவர்களையும் பார்த்தான். அவர்கள் எல்லோருமே தனது உறவினர்களாகவும் ஆசிரியர்களாகவும் இருப்பதைக் கண்டான். அவனுடைய மனம் கலங்கியது. எனக்குப் போர் வேண்டாம்; அரசு வேண்டாம்; போகங்கள் வேண்டாம்; என்றெல்லாம் பலவாறு வருந்தினான். அர்ஜுனனின் அந்த வருத்தமே, அர்ஜுன விஷாத யோகம் என்ற, பகவத்கீதையின் முதல் அத்தியாயமாக உருவெடுத்தது. இந்த அர்ஜுன விஷாத யோகமே, அடுத்துப் பதினேழு அத்தியாயங்களில் பகவான் சொல்லிய உபதேசமான பகவத் கீதைக்கு வித்து போன்றது. வித்து என்றால் விதை. வித்தினால் வித் (ஞானோபதேசம்) உண்டாயிற்று. அர்ஜுனனை நிமித்தமாகக் கொண்டு பகவான் உபதேசித்த ஆத்ம ஞானத்தையே பகவத் கீதை என்ற பெயரால் நாம் போற்றுகிறோம். பகவத் கீதை என்பது தனிப் புத்தகமாக எழுதப்பெறவில்லை. மகாபாரதத்தில் பீஷ்ம பர்வம் 25-ஆம் அத்தியாயம் தொடங்கி 42-ஆம் அத்தியாயம் வரையிலான ஒரு பகுதியாகவே பகவத் கீதை அமைந்திருக்கிறது. பாரத: பஞ்சமோ வேத என்றபடி, பாரதம் ஐந்தாவது வேதம். வேதமோ ஞான காண்டம், கர்ம காண்டம் என்று இரு வகையாகப் பிரிந்திருக்கிறது. வேதத்தில் உள்ள ஞான காண்டம் போலவே, பாரதத்திலுள்ள பகவத் கீதை என்பதும் ஞான காண்டமாகும். வேதத்தில் அந்த பாகத்தை உபநிஷத் என்கிறார்கள்.
ஆகவே, பகவத் கீதையைப் பெரியோர்களிடம் உபதேச ரூபமாக முதலில் கிரகித்து, அதன் பொருளையும் நன்கறிந்து தினந்தோறும் பாராயணம் செய்து வந்தால், சகல உபநிஷத்துகளையும் பாராயணம் செய்வதால் உண்டாகும் நற்பலன்கள் நமக்குக் கிட்டுவது உறுதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக